மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன அழிப்பு வாரத்தின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (16) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் தலைவரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான கந்தையா ஜெகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் தலைவி அ. அமலநாயகி, ஜேசுசபை துறவி அருட்தந்தை ஜோசப்மேரி உட்பட அருட்தந்தையர்கள், அருட்பணியினர் கலந்துகொண்டனர்.
மானுட வாழ்வின் வரலாற்று பெருந்துயரை நினைவுகூருவோம், பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தில் பங்கெடுத்து அவர்களுடன் இருப்போம், இன அழிப்புக்கு நீதிகோருவோம் மானுடத்திற்கு எதிரான அழிவுகள் மீள நிகழாமையை உறுதிப்படுத்துவோம் போன்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.
இதன்போது இறுதி யுத்தத்தில் படுகொலைசெய்யப்பட்டவர்கள் நினைவு கூறப்பட்டு ஆத்ம சாந்தி பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினால் முள்ளிவாய்க்கால் வலிசுமந்த கதை சொல்வோம் துண்டுப்பிரசுரங்களும் இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் வெளிநாட்டினரும் பங்குகொண்டதுடன் அவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி தொடர்பான விளக்கமளிக்கப்பட்டது.




