ஹக்கா மற்றும் சீன பட்டாசுகளை பயன்படுத்த தடை

சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஹக்கா மற்றும் சீன பட்டாசுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

பட்டாசு மற்றும் பட்டாசுத் தொழிலுடன் தொடர்புடைய பொருட்களுக்கு வெளியிடப்படும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி ஹக்கா மற்றும் சீன பட்டாசுகள் எனப்படும் சட்டவிரோத வெடிபொருட்கள் தயாரிக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக அந்த அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது. 

விவசாய நிலங்களிலிருந்து காட்டு விலங்குகளை விரட்ட பரவலாகப் பயன்படுத்தப்படும் இந்த சட்டவிரோத வெடிபொருட்கள் சமீபத்திய காலங்களில் பல உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன. 

மேலும், இந்த வெடிபொருட்கள் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு சவால்களையும் ஏற்படுத்தியுள்ளன என்றும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டுகிறது. 

ஏற்கனவே தடைசெய்யப்பட்ட ஹக்கா பட்டாசுகள் மற்றும் சீன பட்டாசுகள் எனப்படும் இந்த வெடிபொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதால், இந்த நடவடிக்கைகளைத் தடுக்க நாடு முழுவதும் விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த நடவடிக்கைகள் பொலிஸாருடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளன. 

அத்துடன் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் நபர்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற சட்டவிரோத உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது அதற்கு உதவி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாசு உற்பத்தி உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *