உள்ளூராட்சி மன்றங்களுக்கான வர்த்தமானி வெளியீட்டில் சிக்கல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 40 சதவீதமான வேட்பாளர்களின் தகவல்கள் இதுவரையில் தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவில்லை யென்பதுடன், உடனடியாக அந்தத் தகவல்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களை தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.

ஜூன் 02ஆம் திகதியுடன் சபைகளின் பணிகளை ஆரம்பிக்கவேண்டியுள்ளதால் அதற்கு முன்னர் உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் அறிவிக்கவேண்டியுள்ளதாகவும் வர்த்தமானியை வெளியிட்டால் மாத்திரமே சிக்கல் நிறைந்த உள்ளூராட்சி சபைகளில் தலைவர்கள், பிரதித் தலைவர்களை நியமிக்கவேண்டிவருமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இதேவேளை, இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தொகுதிவாரியாக வெற்றியடைந்த 60 சதவீதமான வேட்பாளர்களின் தகவல்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் இருக்கிறது. மிகுதி 40 சதவீதமான வேட்பாளர்களின் தகவல்களைப் பெற்றுக்கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள், சுயேச்சைக்குழுத் தலைவர்கள், செயலாளர்களுக்கு எழுத்துபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அந்தத் தகவல்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஜூன் 02ஆம் திகதியுடன் சபைகளின் பணிகளை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அதற்கு முன்னர் உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் அறிவிக்க வேண்டிய பொறுப்பு ஆணைக்குழுவினதாகும். வர்த்தமானியை வெளியிட்டால் மாத்திரமே தெளிவான வெற்றியாளர் ஒருவர் இல்லாத உள்ளூராட்சி சபைகளில் தலைவர்கள், பிரதித் தலைவர்களை நியமிக்க வேண்டிவரும்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *