நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களில் சிலருக்கு தற்கொலை செய்து கொள்ளும் போக்கு இருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் இன்று (26) தெரிவித்துள்ளது.
பெற்றோர்களின் கையடக்க தொலைபேசி மற்றும் சமூக ஊடக பாவனை அதிகரித்துள்ளதன் காரணமாக, பெற்றோர்-குழந்தை உறவுகள் குறைந்து வருவது இந்த துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைக்குக் காரணமாக இருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
10 முதல் 19 வயது வரையிலான வயதுப் பிரிவு இளமைப் பருவம் என்று அழைக்கப்படுகிறது.
நாட்டின் 22 மில்லியன் மக்கள் தொகையில் 3.5% பேர் அந்த பருவத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்தக் காலகட்டத்தில், பிள்ளைகளின் உடல், மன மற்றும் சமூக நடத்தையில் விரைவான மாற்றங்கள் ஏற்படுவதாகவும், எனவே, இந்தக் கட்டத்தில் அவர்கள் மீது மிகுந்த அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
மாணவர்களின் இளம் பருவ நடத்தை குறித்த தரவுகளைப் பெறும் நோக்கத்துடன், சுகாதார மேம்பாட்டுப் பணியகம் 2024 ஆம் ஆண்டில் ‘உலகளாவிய பாடசாலை சுகாதார கணக்கெடுப்பை’ நடத்தியது.
இதில் 13 முதல் 17 வயதுக்குட்பட்ட 2,585 பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கணக்கெடுப்பு இதற்கு முன் 2016 இல் நடத்தப்பட்டது.
இந்த கணக்கெடுப்பு பிள்ளைகளின் உடல் மற்றும் உள ஆரோக்கியம் குறித்த பல சர்ச்சைக்குரிய உண்மைகள் வௌியானதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அந்த மாணவர்களில் 21.4% பேர் எடை குறைவாகவும், 12.1% பேர் அதிக எடையுடனும், 3% பேர் உடல் பருமனாகவும் அடையாளம் காணப்பட்டனர்.
வீட்டில் உணவு இல்லாததால் 4.3% மாணவர்கள் காலை உணவின் போது பெரும்பாலும் பசியுடன் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும்போது பல சர்ச்சைக்குரிய உண்மைகள் வெளிப்பட்டுள்ளன.
அதன்படி, இந்த மாணவர்களில் 22.4% பேர் கடந்த வருடம் பெரும்பாலும் அல்லது அடிக்கடி மிகவும் தனிமையை உணர்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் 7.5% பேருக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை என்றும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 18% ஆகும்.
அதன்படி, கடந்த வருடத்தில் 15.4% மாணவர்கள் தற்கொலைக்கு வலுவாக உந்தப்பட்டுள்ளனர் என்றும், 9.6% பேர் தற்கொலை செய்து கொள்வது எப்படி என்று திட்டமிட்டுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்று வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்கிடையில், கணக்கெடுக்கப்பட்ட மாணவர்களில் 5.7% பேர் புகைப்பிடிப்பவர்களாகவும், 5.3% பேர் மது அருந்துபவர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது எண்ணிக்கையில் அதிகரிப்பு ஆகும்.
போதைப்பொருள் பயன்பாடும் அதிகரித்துள்ளது, மேலும் 3.2% மாணவர்கள் கஞ்சாவைப் பயன்படுத்துவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பெறப்பட்ட தரவுகளின்படி, கஞ்சா பயன்படுத்திய மாணவர்களின் எண்ணிக்கை 2.1 வீதமாகும்.
இதேவேளை, பாடசாலை நாட்களில் 63% பாடசாலை மாணவர்கள் 8 மணி நேரத்திற்கும் குறைவாகவே நித்திரை கொள்ளவதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தூக்கம் ஒரு அத்தியாவசிய காரணியாக இருப்பதால் இது ஒரு பிரச்சனைக்குரிய சூழ்நிலை.
28.4% மாணவர்கள் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இணையம் அல்லது சமூக ஊடகங்களை கையடக்க தொலைபேசி வழியாக கல்வி சாராத நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
அதன்படி, பெற்றோர்கள் தங்கள் மாணவர்களின் நடத்தை குறித்து மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வைத்தியர்கள் வலியுறுத்துகின்றனர்.