மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால், கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
கடுமையான கடல் சீற்றம் காரணமாக கடல் பிரதேசம் பேரிரைச்சலுடன் காணப்படுகின்றது.
கடல் கொந்தளிப்பு காரணமாக கடற்றொழிலாளர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாமையினால் வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த நிலைமை காணப்படுவதால் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
கடலுக்கு செல்லாமல் இருப்பதால் தமது அன்றாட ஜீவனோபாயத்தை பெற்றுக்கொள்ள எந்தவித வழிகளும் இல்லாமல், அல்லல்பட்டு வருவதாக அப்பகுதியில் உள்ள கடற்றொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், மீண்டும் மாவட்டத்தில் பாரிய அளவிலான கடல் கொந்தளிப்பு ஏற்பட்டிருப்பதால் கடற்றொழிலாளர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருவதாகவும், புதிய காத்தான்குடி ஏத்துக்கால் பூனொச்சிமுனை உட்பட மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் கடற்றொழிலாளர்கள் கடும் அவலங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கரையோர பிரதேசங்களில் அமைந்துள்ள கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான மீன் வாடிகளும் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ள நிலையில், கடல் மீன்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் தொடர்ந்தும் பருவ மழை பெய்து வருவதால் பல இடங்களில் நீர் தேங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
