புதிய பாப்பரசரை தெரிவு செய்ய கர்தினால்கள் ஒன்று கூடல்

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் நித்திய இளைப்பாறுதல் அடைந்தார். பாப்பரசர் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய பாப்பரசரை தெரிவு செய்யும் மாநாட்டில் கர்தினால்கள்  ஒன்று கூடியுள்ளார்கள்.

வத்திக்கானில் உள்ள 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாரம்பரியமிக்க சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான இரகசிய ஆலோசனை மாநாடும், வாக்கெடுப்பும் இன்று புதன்கிழமை (07) நடைபெறுகின்றது.

எந்தவொரு வேட்பாளரும் கிடைக்கக்கூடிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெறும் வரை வாக்கெடுப்பு தொடர்ச்சியாக நடைபெறும்.

மூன்று நாட்களுக்கு பின்னரும் ஒருவர் தெரிவு செய்யப்படவில்லை என்றால்  வாக்காளர்களான கர்தினால்கள் சிந்திக்க நேரம் ஒதுக்குவதற்காக வாக்குப்பதிவு 24 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும். 

1831 ஆம் ஆண்டு முதல் எந்தவொரு மாநாடும் நான்கு நாட்களுக்கு மேல் நீடித்ததில்லை.

கருப்பு புகை மற்றும் வெள்ளை புகை

பாப்பரசர் தெரிவு செய்யப்படும் செயல்முறை நடக்கும்போது சிஸ்டைன் தேவாலயத்தில் வெளியாட்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். உள்ளே என்ன நடக்கிறது என்பதே யாருக்கும் தெரியாது. கர்தினால்களின் வாக்குச் சீட்டுகளை எரிக்கும்போது வெளியாகும் இரு புகைகளை வைத்தே போப் தெரிவு செய்யப்படும் செயல்முறை குறித்து மக்களால் தெரிந்து கொள்ள முடியும். அதாவது கருப்பு நிறத்தில் புகை வந்தால் பாப்பரசர் தெரிவு செய்யப்படும் செயல்முறை இன்னும் முடியவில்லை என அர்த்தம். வெள்ளை புகை என்பது புதிய பாப்பரசர்  தெரிவு செய்யப்பட்டதை குறிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *