ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இதன் உச்சகட்டமாக, சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணிக்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பலும் ஈரானியப் படைகளின் இலக்காகக் கருதப்படும் என்றும், அவை மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
தனது அதியுயர் தலைவர் படுகொலை செய்யப்பட்டதற்குப் பதிலடியாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய இலக்குகளை நோக்கி ஈரான் ஏற்கனவே தொடர்ச்சியான தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.
பொருளாதார தாக்கம்: உலகளாவிய மசகு எண்ணெய் விநியோகத்தில் இந்த நீரிணை முக்கியப் பங்கு வகிப்பதால், இதன் மூடல் சர்வதேச சந்தையில் பெரும் பொருளாதார அதிர்வுகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
“எமது இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவாலுக்குப் பதிலடியாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது,” என ஈரான் ஆயுதப் படைகள் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
அயதுல்லா அலி கொமேனியின் மறைவைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகள் ஒன்றிணைந்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராகத் தீவிரமான போர்ப்பிரகடனத்தை முன்னெடுத்து வருகின்றன. இந்த நீரிணை மூடப்பட்டுள்ளமையானது, பிராந்தியத்தில் ஒரு முழு அளவிலான போர் வெடிப்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
