வைத்தியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று காலை 8.00 மணி முதல் முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த சங்கம் இதனை அறிவித்துள்ளது. 

நேற்று (30) இரவு சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ (தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு), சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் இடையே நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட இணக்கங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

சுகாதார அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையை மீறி, தன்னிச்சையாக நடைமுறைப்படுத்த முயற்சித்த வைத்தியர்களின் இடமாற்றங்களை இடைநிறுத்தவும், அதற்குப் பதிலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையின் மூலம் ஒரு கால அட்டவணையுடன் வைத்தியர்களின் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்தவும் இணக்கம் ஏற்பட்டதாக அந்த சங்கம் தெரிவிக்கின்றது. 

அத்துடன், இந்த இணக்கங்கள், இன்று நடைபெறும் சுகாதார அமைச்சின் நிர்வாக வைத்தியர்களின் விசேட கலந்துரையாடலில் உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, அந்த இணக்கங்களை கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சின் நிர்வாக வைத்தியர்களின் கலந்துரையாடலில் குறித்த இணக்கங்கள் உறுதிப்படுத்தப்பட்டு எழுத்துப்பூர்வமாக கிடைக்கும் வரை, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபையால் அறிவிக்கப்பட்டிருந்த வேலைநிறுத்தத்தை இன்று நண்பகல் 12.00 மணி வரை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அந்த இணக்கங்கள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், எந்த நேரத்திலும் மீண்டும் வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *