மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆனைகட்டியவெளி வயல் கண்டத்துக்குள் இன்று புதன்கிழமை (12) அதிகாலையில் புகுந்த காட்டுயானைகள் அங்கு செய்கையிடப்பட்டுள்ள பல ஏக்கர் பெரும்போக வேளாண்மை வயல்நிலங்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்கையிடப்பட்டுள்ள பெரும்போக வேளாண்மை பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.
அண்மையில் பெய்த பலத்த மழை, வெள்ளம் காரணமாக அழிந்துபோய் மீதமுள்ள பயிர்களை அறுவடைக்கு முன்னதாக காட்டு யானைகள் துவம்சம் செய்து தமது வாழ்வாதாரத் தொழிலான வேளாண்மையை பாழ்படுத்திவிட்டதாக அப்பகுதி விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.
வளர்ந்து செழித்து நிற்கும் பயிர்களை காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக நடுநிசியிலிருந்து இரவு முழுவதும் போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தமது வயல் பகுதியை அண்மித்துள்ள சிறுசிறு பற்றைக் காடுகளிலும், வாய்க்கால் ஓரங்களிலும் காட்டு யானைகள் தங்கி நின்று இரவு வேளைகளில் வயல் நிலங்களுக்குள் புகுந்து நிலங்களை நாசம் செய்கின்றன. இதனால் இவ்வருடத்துக்கான தமது வாழ்வாதாரம், தொழில் மேலும் பாதிக்கப்பட்டு பாரிய நட்டத்தை தாம் எதிர்கொண்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவாங்கரைப் பிரதேசத்தில் மிக நீண்ட காலமாகவே காட்டுயானைகளின் தொல்லை இருந்து வருகிறது.
யானைகள் கிராமங்களுக்குள் உட்புகாமல் இருப்பதற்காக யானைப் பாதுகாப்பு வேலிகளை அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தும், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.