மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை கிராமத்தில் மின்சாரக் கம்பியில் சிக்குண்டு குடும்பஸ்தரொருவர் பலியாகியுள்ளார்.
பன்சேனை, நல்லதண்ணிஓடை – அடச்சகல் சந்திப் பகுதியிலுள்ள விவசாயக் காணியொன்றில் சட்டவிரோதமான முறையில் காட்டு யானைப் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியதாலேயே முதலைக்குடாவில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான சோமசுந்தரம் சீராளசிங்கம் (வயது 39) எனும் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் மூன்று விவசாயிகள் யானையை விரட்டுவதற்காகச் சென்று திரும்பி வரும் போது விவசாயி ஒருவர் தனது காணியில் சட்டவிரோதமான முறையில் அமைத்திருந்த யானைப் பாதுகாப்பு மின்சாரக் கம்பியில் சிக்கியதில், ஸ்தலத்திலேயே ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் மரண விசாரணையின் பின் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பகுதியில் கிராம உத்தியோகத்தரால் கடந்த மார்கழி மாதத்தில் ஒலிபெருக்கி மூலமும் கிராமக் கூட்டங்களூடாகவும் காட்டு யானைப் பாதுகாப்புக்காக சட்டவிரோத மின்சார வேலியை அமைக்க வேண்டாமென அறிவிக்கப்பட்டிருந்தது.