மட்டக்களப்பில் பிள்ளையானின் கட்சி காரியாலயம் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகை

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை கொழும்பில் இருந்து வந்த சி.ஐ.டி யினர் மற்றும் விசேட அதிரடிப்படையின் இன்று வெள்ளிக்கிழமை (30) பகல் 11.00 மணியில் இருந்து சுற்றி வளைத்து முற்றுகையிட்டு கட்டிட நிலத்தை உடைத்து தோண்டி பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றை காலை முன்னெடுத்து வருகின்றதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கடந்த ஏப்ரல் 8 ம் திகதி கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) யினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதம் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு முதலாவது வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக்; காரியாலயத்தை கொழும்பில் இருந்து வந்துள்ள விசேட அதிரடிப்படை மற்றும் சி.ஐ.டியினர் சம்பவதினமான இன்று பகல் 11.00 மணிக்கு முற்றுகையிட்டன் இதன்போது அங்கிருந்தவர்களை அழைத்து அவர்களின் கையடக்க தொலைபேசிகளை பெற்றுக் கொண்டு ஒரு இடத்தில் இருக்க வைத்தனர்

இதனை தொடர்ந்து காரியாலயத்தில் இருந்து யாரும் வெளியேறவே உட் செல்லவே விடாது கட்டிட நிலத்தை தோண்டி பலத்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *