மட்டக்களப்பில் தீ பற்றி எரிந்த உணவகம்! தெய்வாதீனமாக உயிர் தப்பிய 7 பணியாளர்கள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள பூட்டியிருந்த உணவகம் ஒன்று திடீரென தீப்பற்றியதையடுத்து உணவகத்தில் நித்திரையில் இருந்த 7 பணியாளர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

குறித்த சம்பவமானது, நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.00 மணிக்கு இடம் பெற்றதை அடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பல மணி நேரத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் கடை தொகுதி முற்றாக தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.

இந்த விடயம் பற்றி தெரியவருகையில்,

குறித்த உணவகம் வழமைபோல சம்பவ தினம் இரவு 9.00 மணிக்கு மூடியதுடன் அங்கு வேலை செய்துவரும் 7 இளைஞர்களும் உணவகத்தில் நித்திரைக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் உணவகத்தில் இருக்கும் மின்சார பிரதான ஆழியிலிருந்த மின் ஒழுக்கு சுமார் 10.30 இரவு மணியளவில் தீப்பற்றி எரிவதை அங்கு நித்திரைக்குச் சென்ற ஒருவர் கண்டு கொண்ட நிலையில் தீ பிரகாசமாக எரிய தொடங்கியதை அடுத்து அங்கு நித்திரையில் இருந்த 6 பேரையும் எழுப்பி கொண்டு கடையின் கதவை உடைத்து கொண்டு வெளியேறினர்.

அவர்கள் அங்கிருந்து வெளியேறி 5 நிமிடத்தில் கடைத்தொகுதியில் பாரிய தீ ஏற்பட்டு பெரும் தீச்சுவாலை அடுத்து அருகில் இருந்த வீடுகளில் இருந்தவர்கள் பெரும் பதற்றம் அடைந்தனர்.

இதனையடுத்து மாநகரசபையின் தீயணைப்பு படை மற்றும் பொலிசாரின் தீயணைப்பு பிரிவினர், காத்தான்குடி நகரசபை தீயணைப்பு படை இணைந்து நள்ளிரவு 12.30 மணிக்கு பல போராட்டத்தின் மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதும் கடைதொகுதி முற்றாக எரிந்து சாம்பலாகி உள்ளது.

இந்த தீ விபத்து மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்டுள்ளதா பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதேவேளை சம்பவ இடத்துக்கு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் வைரமுத்து தினேஷ்குமார், மாநகர சபை உறுப்பினர்களான மதன்,பிரதி, ஜனகன், தரண் ஆகியோர் வருகை தந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஈடுபட்டனர்.

இது தொடர்பான விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *