அம்பானியின் சொத்துகள் முடக்கம்

பணமோசடி வழக்கில் அனில் அம்பானியின் ரூ.3,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானியின் குழும நிறுவனங்களுக்கு எதிராக, தொடரப்பட்ட பணமோசடி வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அவருக்கு தொடர்புடைய ரூ.3,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகளை அமுலாக்கத் துறை (ED) முடக்கி நடவடிக்கை எடுத்திருப்பதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

முடக்கப்பட்ட சொத்துகளில், மும்பையின் பாலி ஹில் பகுதியில் உள்ள 66 ஆண்டுகள் பழமையான அம்பானியின் வீடு உள்பட அவரது குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான பிற குடியிருப்புக் கட்டடங்கள், வணிக வளாகங்கள் ஆகியவை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

டில்லியில் உள்ள மகாராஜா ரஞ்சித் சிங் மார்க்கில் உள்ள ரிலையன்ஸ் மையத்துக்குச் சொந்தமான ஒரு நிலப்பகுதி, தேசிய தலைநகர் நொய்டா, காசியாபாத், மும்பை, புணே, தாணே, ஹைதராபாத், சென்னை மற்றும் கிழக்கு கோதாவரியில் உள்ள பல சொத்துக்களும் இதில் அடங்கும். ஆதாரங்களின்படி, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.3,084 கோடி என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் லிமிடெட் போன்றவை திரட்டிய பொது நிதியை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்தல் மற்றும் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கின் கீழ் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *