ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான மூன்று விமானங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த போதிலும், அவற்றிற்காக மாதாந்தம் 9 இலட்சம் டொலர்கள் தவணைகளாக செலுத்தப்பட்டுள்ளதாக இன்று (25) பாராளுமன்றத்தில் தெரியவந்தது.
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும இன்று பாராளுமன்றத்தில் இது தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், ஶ்ரீலங்கன் விமான சேவையிடம் மொத்தம் 22 விமானங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
தற்போது, பிரதான விமான சேவைக்கு 3,194 பணியாளர்களும், மூலோபாய வணிக அலகுகளில் 2,862 பணியாளர்களும் பணிபுரிவதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
விமான சேவையை வலுப்படுத்தும் நோக்கில் 2025 முதல் ஐந்தாண்டு திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தத் திட்டங்கள் தொடர்பாக அமைச்சு ஆய்வு செய்து வருவதாகவும் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.
அதன்படி, இந்த ஐந்து ஆண்டுகளில் விமான சேவையானது செயல்பாட்டு இலாபத்தையும் அரசின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக பிரதி அமைச்சர் கூறினார்.