தரம் ஆறு பாடத்திட்டத்தில் ஏற்பட்ட பிழை தொடர்பில் விரைவில் நடவடிக்கை – அமைச்சர் விஜித

தரம் ஆறு பாடத்திட்டத்தில் ஏற்பட்ட பிழை தொடர்பில் விசாரணைகள் நடத்திய குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதால் அரசாங்கம் அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமென்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நேற்று (04.01.2026) அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்திருந்தார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர் ‘‘இலங்கையின் புதிய கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகளை சில குழுக்கள் அரசியல் கட்சிகள் அரசியல் கோணங்களில் கருத்துகளை முன்வைத்து, இது பிரதமரின் தனிப்பட்ட சிந்தனைகளைக் கொண்டுள்ளதாக முன்னெடுக்கும் பிரசாரங்களை அரசாங்கம் என்ற வகையில் நாம் கண்டிக்கிறோம்.

அதேவேளை, இதைக் கொண்டு பிரதமரைக் கேலிக்கும் அவமானப்படுத்தலுக்கும் உள்ளாக்கும் கருத்துகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது புதிய கல்விச் சீர்திருத்த அரசாங்கத்தின் கூட்டு முயற்சியாகும்.

அத்தோடு அரசாங்கத்தின் பொறுப்புமாகும். நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலத்தை நோக்காகக்கொண்டு அரசாங்கம் முன்னெடுக்கும் கொள்கை ரீதியிலான திட்டமாகும்.

பிரதமரின் தனிப்பட்ட எவ்வித அழுத்தங்களும் இங்கில்லை. அது அரசின் கூட்டுப் பொறுப்பாகும். தேசிய கல்வி ஆணைக்குழுவின் கொள்கை மூலாதாரங்களைக் கொண்டு தேசிய கல்வி நிறுவனத்தினாலே கல்விச் சீர்திருத்தங்கள் இயற்றப்பட்டு கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்றன.

தரம் ஆறு பாடத்திட்டத்தில் ஏற்பட்ட பிழை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அது தொடர்பில் அவசரமாக நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் நினைப்பதுபோல் எவ்வித தவறான செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் இடமளிக்காது என உறுதியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *