தரம் 6 இற்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லை நீடிப்பு

05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பாடசாலைகளில் 06 ஆம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை அதிபர்கள் இணையவழி (Online) முறைமை ஊடாக சமர்ப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. 

இணையவழியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் வசதி டிசம்பர் 05 ஆம் திகதிக்குப் பின்னர் செயலிழக்கச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு அந்தத் திகதி டிசம்பர் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

இதேவேளை, 2025 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் 6 ஆம் தரத்திற்கு அனுமதி பெறுவதற்கான முதலாவது மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை எனவும், அது தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் பொய்யான பிரச்சாரங்கள் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

2026 ஆம் ஆண்டு 06 ஆம் தரத்திற்காக முதலாம் சுற்றில் பாடசாலைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், நிலவும் வெற்றிடங்களுக்காக இணையவழி ஊடாக மேன்முறையீட்டு விண்ணப்பங்களைக் கோரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *