இறக்குமதி செய்யப்பட்ட உப்பை மொத்த விலையாக கிலோ 150ரூபாவுக்கு விற்பனை செய்ய தீர்மானம்

தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகை இன்றிரவு இலங்கைக்கு வரவுள்ளதாக வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

அதன்படி, இன்றிரவு (21) நாட்டிற்கு 3,050 மெட்ரிக் தொன் உப்பை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

தனியார் துறையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 250 மெட்ரிக் தொன் உப்பும், தேசிய உப்பு நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 2,800 மெட்ரிக் தொன் உப்பும் இதில் அடங்குவதாக அமைச்சர் தெரிவித்தார். 

நாட்டின் மாதாந்திர உப்புத் தேவை 15,000 மெட்ரிக் தொன் என்பதுடன், ஆண்டுத் தேவை 180,000 மெட்ரிக் தொன் ஆகும். 

நாட்டின் உப்பு அறுவடை இரண்டு பருவங்களில் மேற்கொள்ளப்படுவதுடன், ஒருபோகுத்தின் அறுவடை பெப்ரவரி நடுப்பகுதியிலிருந்து ஏப்ரல் நடுப்பகுதி வரையிலும், அடுத்த போகத்தின் அறுவடை ஜூன் நடுப்பகுதியிலிருந்து ஒக்டோபர் நடுப்பகுதி வரையிலும் மேற்கொள்ளப்படுகிறது. 

இருப்பினும், கடந்த ஆண்டு நிலவிய அதிகள மழை வீழ்ச்சி காரணமாக இந்த இரண்டு போகங்களிலும் எதிர்பார்த்த அளவு உப்பு அறுவடை கிடைக்கப்பெறாததால், நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உப்பு இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *