பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி சிக்கியது

பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பாணந்துறை ஹொரேத்துடுவ பாலம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த ஒருவரை நேற்று மாலை சோதனை செய்தனர். 

அப்போது, ​​குறித்த நபரின் சட்டைப் பையில் இருந்த வெளிநாட்டு தயாரிப்பு பேனா வடிவ துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

இது ஒரு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி என்றும், அது செயல்படும் நிலையில் உள்ளது என்றும், கொலைக்கு மிகவும் சூட்சுமமாக பயன்படுத்தக்கூடிய ஆயுதம் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சந்தேகநபர், சுமார் நான்கரை அங்குல நீளம் கொண்ட இந்த துப்பாக்கியை ஏன் வைத்திருந்தார் என்பது குறித்து களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

மொரட்டுவை, மோல்பே பகுதியைச் சேர்ந்த 43 வயதானவரே இவ்வாறு துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார். 

அவர் இன்று (04) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *