நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு காரணமாக செயலிழந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் அனைத்து மின் உற்பத்தி பிறப்பாக்கிகளும் மீள் திருத்தப்பட்டு மீண்டும் செயற்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இதன்படி, 02 ஜெனரேட்டர்கள் தேசிய மின்வலயத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், மற்றைய ஜெனரேட்டரை தேவைப்படின் கணினியுடன் இணைக்க முடியும் எனவும் மின் உற்பத்தி நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் திகதி ஏற்பட்ட திடீர் மின் தடையால், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் பாதுகாப்பு அமைப்பு செயற்படுத்தப்பட்டமையினால் 03 மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்தன.
இதன் விளைவாக, தேசிய மின்சார அமைப்பு 900 மெகாவாட் மின்சாரத்தை இழந்தது.
நிலைமையை சமாளித்து கடந்த 10, 11 ஆகிய இரு தினங்களில் தலா ஒன்றரை மணிநேரமும், கடந்த 13ஆம் திகதி ஒரு மணிநேரமும் மின்சாரத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்தது.
எவ்வாறாயினும், நேற்று காலை, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது ஜெனரேட்டர் கணினியுடன் இணைக்கப்பட்டது.
இதன் காரணமாக நாளாந்த மின்வெட்டு முடிவுக்கு கொண்டுவரப்படுவதாக எரிசக்தி அமைச்சு நேற்று (14) அறிவித்தது.
நேற்று பிற்பகல் செயலிழந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் தேசிய மின்தொகுப்புடன் இணைக்கப்பட்டதன் காரணமாக, அந்த மின் நிலையத்திலிருந்து 600 மெகாவாட் மின்சாரம் தேசிய மின்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.