திருத்தந்தை பிரான்சிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நலம் பெற வேண்டி பலரும் தேவாலயங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவராக இருந்து வருபவர் 88 வயதான திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த 2023ம் ஆண்டில் நிம்மோனியாவால் பாதிக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் மருத்துவ சிகிச்சை தொடர்ந்து பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்ததில் அவருக்கு சுவாச குழாயில் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை உள்ளிட்ட பலவகையான தொற்றுகள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அவருக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் நலம்பெற வேண்டி கத்தோலிக்க தேவாலயங்களில் கிறிஸ்தவ மக்கள் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வத்திக்கான் வெளியிட்டுள்ள தகவலில், திருத்தந்தை பத்திரிக்கை வாசிப்பது உள்ளிட்ட அன்றாட பணிகள் சிலவற்றை செய்வதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை திருத்தந்தை உடல்நலனை கருத்தில் கொண்டு மார்ச் 5 வரைதிருத்தந்தையின் அனைத்து நிகழ்ச்சி திட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.