தபால் ஊழியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில்

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் நாளை (17) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். 

நாளை மாலை 4.00 மணி முதல் குறித்த ஊழியர்கள் தமது சேவையில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தபால் ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு, நிர்வாக அலுவலகம் மற்றும் கணக்காய்வு அலுவலகங்களில் ஊழியர்களின் பணியை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் வௌியேறும் நேரம் என்பவற்றை கைவிரல் அடையாள இயந்திரங்களில் பதிய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளனர். 

அதன்படி, நாளை மாலை 4.00 மணிக்கு கொழும்பு மத்திய தபால் பரிமாற்றத்தின் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளனர். 

பின்னர் நாளை நள்ளிரவு 12 மணி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களில் உள்ள ஊழியர்கள் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *