ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகாரம் ,வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டுக்கு வருகை தரும் ஜேர்மன் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு என்னென்ன உத்திகளை கையாள வேண்டும் என்பது குறித்து கவனம் செலுத்தி வருகின்றோம்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஜேர்மன் நாட்டு ஜனாதிபதி மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அநுரகுமார திஸாநாயக்க கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் சர்வதேச நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளும் 5 ஆவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியா, சீனா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.