சிறைச்சாலைகளில் நவீன பாதுகாப்பு அமைப்புகளை நிறுவ நடவடிக்கை

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் விசேட பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, தொலைபேசி இணைப்பு தடுப்பு சாதனங்களின் (ஜேமர்) நவீனமயமாக்கலும் சேர்க்கப்பட்டுள்ளது. 

அண்மையில் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் சம்பவத்தைத் தொடர்ந்து, நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி சிறைச்சாலைகளில் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். 

சிறைச்சாலைகளில் ஏற்கனவே ஜேமர்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், கட்டிடங்களின் தன்மை காரணமாக தொலைபேசி இணைப்புகளை முற்றிலுமாகத் துண்டிக்க முடியவில்லை என்று சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதன்படி, ஜேமர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை நெறிப்படுத்துமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு பாதுகாப்பு அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தற்போது பொருத்தப்பட்டுள்ள ஜேமர்களின் குறைபாடுகள் காரணமாக, கைதிகள் தொலைபேசி இணைப்புகள் மூலம் வெளியாட்களுடன் ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகள் அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனால் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தங்கள் விருப்பப்படி போதைப்பொருள் வலைப்பின்னல்களையும் குற்றங்களையும் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

குறிப்பாக உயர்மட்ட சந்தேக நபர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பூஸா போன்ற சிறைகளில், அவ்வப்போது கையடக்க தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன. 

இது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் தங்கள் குற்ற வலைப்பின்னல்களைப் பாதுகாப்பாக இயக்க அனுமதித்துள்ளமை என்பது இரகசியமல்ல. 

நாட்டில் 28 சிறைச்சாலைகள் இயங்குகின்றன, அவற்றில் 10 திறந்தவெளி சிறைச்சாலைகள் ஆகும். 

அந்த 28 சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மொத்த கைதிகளின் எண்ணிக்கை 29,500 ஆகும். அவர்களில் 1,200 பேர் பெண் கைதிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *