உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவித்தல்

க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் இம் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். 

அதன்படி, நாடு முழுவதும் உள்ள 2,362 பரீட்சை நிலையங்களில் உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இம்முறை பரீட்சைக்காக பாடசாலை விண்ணப்பதாரர்கள் 246,521 பேரும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் 94,004 பேரும் உட்பட மொத்தம் 340,525 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளனர். 

அத்துடன், இம்முறை உயர்தரப் பரீட்சைக்காக நடத்தப்படும் அனைத்து தனியார் வகுப்புகள், பாடத்திட்டங்கள் தொடர்பான கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள் மற்றும் ஊகக் கேள்வித்தாள்கள் கலந்துரையாடல் உட்பட பரீட்சை தொடர்பான அனைத்து விளம்பர நடவடிக்கைகளும் நாளை (04) நள்ளிரவு 12.00 மணி முதல் தடை செய்யப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். 

பரீட்சைக்கான பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாகவும், அனுமதி அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் இன்று (03) முதல் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *