இலங்கையில் தாக்குதல் – ஐக்கிய இராச்சியம் எச்சரிக்கை

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்சத்தை நிராக்க முடியாது என ஐக்கிய இராச்சியம் (uk) நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் இடங்களான ஹோட்டல்கள், பார்கள், உணவகங்கள் மற்றும் இரவு விடுதிகள், கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பெரிய பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக தாக்குதல்கள் நடத்தப்படலாம் என புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசணையில் பிரிட்டனின் வெளியுறவு மற்றும் கொமன்வெல்த் அலுவலகம் கூறியுள்ளது.

பிரிட்டிஷ் பிரஜைகள் நெரிசலான பொது இடங்களை தவிர்க்கவும் தங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி எப்போதும் விழிப்புடன் இருக்கவும் உள்ளூர் ஊடக அறிக்கைகளுடன் புதுப்பித்த நிலையில் இருக்கவும் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

“இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசங்களில் நிலவும் மோதல்கள் உலகம் முழுவதும் அதிக பதற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. அல்கொய்தா மற்றும் டேஷ் போன்ற பயங்கரவாத குழுக்கள் மோதலுக்கு பதிலளிக்கும் வகையில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த தங்கள் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த மோதல் தனிநபர்களை தாக்குதல் நடத்த தூண்டும்” என்று பிரிட்டனின் பயண ஆலோசனை கூறுகிறது.

தாக்குதல்கள் கண்மூடித்தனமாகவும் எச்சரிக்கை இல்லாமல் நிகழலாம் என்பதுடன் பயங்கரவாத தாக்குதல்கள் யூத அல்லது முஸ்லிம் சமூகங்களையோ அல்லது இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலன்களையோ குறிவைக்கலாம் என்று மேற்படி பயண ஆலோசனை கூறுகிறது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈஸ்டர் ஞாயிறு அன்று, இலங்கையில் 03 தேவாலயங்கள் மற்றும் 03 ஹோட்டல்களுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களில் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் 08 பிரிட்டிஷ் பிரஜைகள் உட்பட 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக இங்கிலாந்து வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *