இந்தியாவின் ‘ஒபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடர்ந்து எல்லையை ஒட்டிய பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பொது இடங்களில் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரு மாநிலங்களிலும், பொலிஸாரின் விடுமுறை இரத்துசெய்யப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸாருக்கு வார விடுமுறை, விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஒபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி இந்திய எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக பஞ்சாப்பில் பாகிஸ்தான் இராணுவம் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணை தாக்குதலை இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது.
ஏவுகணை எதிர்ப்பு அமைப்பால் இடைமறித்து அழிக்கப்பட்ட ஏவுகணை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை பஞ்சாப்பின் அமிர்தசரசில் செயலிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் பஞ்சாப்பின் பெரோஸ்பூர் பகுதியில் எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாகிஸ்தானிய ஊடுருவல்காரர் நேற்று (7) இரவு இருளைப் பயன்படுத்தி, சர்வதேச எல்லையின் பாதுகாப்பு வேலியை தாண்டி உள்ளே நுழைவதை எல்லை பாதுகாப்பு படையின கண்டனர். அப்போது எல்லை பாதுகாப்பு படையினரின் எச்சரிக்கையையும் மீறி அவர் நுழைய முயன்றதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.