மரக்கறி விலை வீழ்ச்சி – விவசாயிகள் பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி விலைகள் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதால், விவசாயிகள் கடுமையான நட்டத்தை எதிர்கொண்டுள்ளனர். 

குறிப்பாக, கேரட், லீக்ஸ், கோவா போன்ற மரக்கறிகள் கிலோ ஒன்றுக்கு 70 முதல் 90 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகின்றன. 

இதனால், உற்பத்திச் செலவைக்கூட ஈடுசெய்ய முடியாத துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தங்கள் கவலையை வெளிப்படுத்துகின்றனர்.

நுவரெலியாவில் உள்ள பொருளாதார மையங்களின் முதலாளிகள், உள்ளூர் விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை வாங்குவதற்குப் பதிலாக, ஊவா மாகாணத்திற்குச் சென்று அங்குள்ள விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை மலிவாகக் கொள்முதல் செய்கின்றனர். 

இதனால், நுவரெலியா விவசாயிகளின் மரக்கறிகள் விற்பனையாகாமல், நீண்ட காலத்திற்கு நிலத்தில் வைத்திருக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. 

இதனால், மரக்கறிகள் அழிந்து போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மேலும், உரம் மற்றும் மருந்து போன்றவற்றின் விலை அதிகரித்துள்ள நிலையில், மரக்கறிகளின் விலை குறைவதால் விவசாயிகள் மிகுந்த நட்டத்தைச் சந்திக்கின்றனர். 

இதுகுறித்து விவசாயிகள் தங்கள் அதிருப்தியைப் பின்வருமாறு தெரிவித்தனர்:

“கேரட், லீக்ஸ், கோவா போன்ற பயிர்களை மூன்று மாதங்களுக்கு மேல் நிலத்தில் பேண முடியாது. தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக மரக்கறிகள் அழியும் அபாயம் உள்ளது. உரம் மற்றும் மருந்து செலவுகள் அதிகமாக இருக்கும் நிலையில், அரசு எவ்வித மானியமும் வழங்கவில்லை. 70 முதல் 90 ரூபாய்க்கு மரக்கறிகளை விற்பனை செய்யும்போது உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்ய முடியாத நிலை உள்ளது. மேலும், நுவரெலியா விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை வாங்காமல், முதலாளிகள் ஊவா மாகாணத்திற்குச் சென்று மலிவாக மரக்கறிகளை வாங்கி, அவற்றை நுவரெலியா மரக்கறிகள் என்று பிற மாவட்டங்களில் விற்பனை செய்கின்றனர். இதனால், நுவரெலியா விவசாயிகளுக்கு பெரும் நட்டம் ஏற்படுகிறது.”

இந்தப் பிரச்சினைக்கு அரசு உரிய தீர்வை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும், நுவரெலியாவில் தொடர்ந்து பயிரிடப்படும் மரக்கறி வகைகளுக்கு, கீழ்மட்டப் பிரதேசங்களில் உள்ள வயல்களில் இதே பயிர்கள் உற்பத்தி செய்யப்படுவதால், மரக்கறிகளுக்கான தேவை குறைந்து, உற்பத்தி அதிகரித்துள்ளது. 

இதுவும் விலை வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக உள்ளது.இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை அரசு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *