இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம்

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா தயாராகிவிட்டதாகவும் இந்த சூழலில் தங்களிடமிருக்கும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

பஹல்காம் தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி  விளாதிமீர் புடின் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தான் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருக்கிறது.

பஹல்காம் தாக்குதலுக்கு பின், இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முக்கியமாக சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று விளக்கியுள்ளது பாகிஸ்தான்.

இதனிடையே, இஸ்லாமாபாத்தில் இன்று செய்தியாளர்களுடன் அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிஃப் பேசியதாவது,

 “பாகிஸ்தான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறது. இந்தியா இராணுவ தாக்குதலுக்கு ஆயத்தமாக இருப்பது குறித்து இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விரிவாக பேசினோம். எங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மட்டுமே அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்” என்றார்.

போர்ப்பதற்றத்தை தணிக்க அரபு நாடுகள், சீனா, பிரிட்டன், அமெரிக்காவிடம் பாகிஸ்தான் தொடர்புகொண்டு பேசி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *